எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

ஜெயரஞ்சன், பொருளாதார நிபுணர்களுக்கு எடப்பாடி கேள்வி!

Staff Writer

இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசுக்குஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்களையும்திட்டக்குழு செயல்துணைத்தலைவர் ஜெயரஞ்சனையும் காட்டமாகக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

அவரின் கருத்து விவரம்:

”70 ஆண்டுகால ஆட்சியில் இல்லாத கடனை வாங்கிக் குவித்து, ஆயிரம் ஆண்டுகள் நின்று பேசும் ஒரு சாதனையை (?) நிகழ்த்தியுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு.

உங்கள் பெயரை சொல்லி தான் பொருளாதார கமிட்டி என்று ஒன்றை அமைத்தார் தமிழ்நாட்டின் பொம்மை முதல்வர். அவருக்கு நீங்கள் என்னென்ன ஆலோசனை கொடுத்தீர்கள்? 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கடன் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று நீங்கள் ஏதேனும் ஆலோசனை சொன்னீர்களா?

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களாக, Transparency and Accountability பொருட்டு, நீங்கள் அளித்த ஆலோசனைகள் குறித்த விளக்கத்தை மக்களுக்கு உங்களால் அளிக்க முடியுமா?

பொருளாதாரத்தையே தான் தான் கண்டுபிடித்தது போல, அஇஅதிமுக ஆட்சியில் வாய்வாள் சுழற்றிக் கொண்டிருந்த ஜெ. ஜெயரஞ்சன் அவர்களே.... மாநில திட்டக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள், இந்த ஐந்தாண்டுகளில் கிழித்தது என்ன? திமுக அரசு கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் "Agent"-ஆக தான் இருந்தீர்களா நீங்கள்? இந்த 10.62 லட்சம் கோடியை துணை முதல்வர் உதயநிதி கேட்டதுபோல, "உங்கள் அப்பா வீட்டு காசை" கொடுத்து அடைக்கப் போகிறீர்களா?

ஒவ்வொரு தமிழக மக்கள் தலையிலும் 1,32,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றிவிட்டு, உங்கள் குடும்பம் மட்டும் துபாய், ஆம்ஸ்டர்டாம் என "தொழில்" சுற்றுலாவில் திளைத்துக் கொள்வது தான் உங்கள் "பொருளாதார மாடலா" ஸ்டாலின் அவர்களே?” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.