தமிழ் நாடு

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு எம்.பி. சீட்!

Staff Writer

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்து வருகிறது.

ஏற்கனவே முஸ்லீம் லீக் மற்றும் மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 3) தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதில், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும்; இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குழுவினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், “நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு ராஜ்யசபா உறுப்பினராவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் யார் வேட்பாளர் என்று நாளை அறிவிப்பார். சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதி எந்தெந்த தொகுதி என்று பின்னர் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.