தமிழ் நாடு

நாய் கடித்து சிகிச்சை எடுக்காதவர் பரிதாப சாவு!

Staff Writer

வீட்டில் வளர்த்துவந்த நாய் கடித்து 5 மாதங்களாகியும் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

திருமயம் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் இராமலிங்கம். 53 வயதான இவரை வீட்டு நாய் ஒன்று கடித்துவிட்டது. பின்னர் அது 10 நாள்களில் இறந்துபோனது. 

இதனிடையே நாய்க்கடிக்கு எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாத இராமலிங்கம், இரு நாள்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெறிநோய் ஏற்பட்டு மீளமுடியாமல் உயிரிழந்தார். 

அதன்பிறகு தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர் எடுத்த நடவடிக்கையால், அவருடன் கடைசியாக நெருக்கமாகப் பழகிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.