”இந்தியா முழுவதும் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இதன் மூலம் சாதாரண வகை நெல்லின் விலை ரூ.2441 ஆக உயரும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த உயர்வு போதுமானதல்ல.” என்று பா.ம.க.தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது :
”பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சாதாரண வகை நெல்லின் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,441 ஆகவும், சன்ன வகை நெல்லுக்கான விலையை ரூ.2,461 ஆகவும் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இந்த இரு வகை நெல்களுக்கான கொள்முதல் விலை முறையே ரூ.2,369 ஆகவும், ரூ.2,389 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் குவிண்டாலுக்கு ரூ.72 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் விலையுடன் ஒப்பிடும் போது இந்த விலை உயர்வு வெறும் 3% மட்டும் தான். கடந்த ஆண்டில் நெல் கொள்முதல் விலையை 3%, அதாவது குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்திய மத்திய அரசு, நடப்பாண்டும் அதே அளவிலேயே உயர்த்தியுள்ளது. நெல்லின் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.
நெல்லுக்கான உற்பத்திச் செலவுடன், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, 50% இலாபம் சேர்த்து கொள்முதல் விலை வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2300&க்கும் கூடுதலாக செலவாவதாக உழவர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், அதை விட குவிண்டாலுக்கு ரூ.141 மட்டும் உயர்த்தி வழங்குவது எந்த வகையில் நியாயம்? கிட்டத்தட்ட உற்பத்திச் செலவுக்கு இணையாகவே கொள்முதல் விலையும் நிர்ணயிக்கப்பட்டால் உழவர்களுக்கு லாபமே கிடைக்காது. வட்டிக்கு கடன் வாங்கி வேளாண்மை செய்யும் உழவர்கள், போதிய லாபம் கிடைக்காவிட்டால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், அதற்கான உற்பத்திச் செலவு முறையாக கணக்கிடப்படாதது தான். நெல்லுக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும் போது, நிலத்தை தயார் செய்தல், விதை மற்றும் நடவு, உரங்கள், நீர்ப்பாய்ச்சுதல், களை எடுத்தல், பயிர்ப்பாதுகாப்பு, அறுவடை செய்தல் ஆகிய செலவுகளுடன் நிலத்திற்கான குத்தகை மதிப்பு, பணியாளர்களுக்கான கூலி ஆகியவையும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், தொழிலாளர்கள் கூலி, குத்தகை உள்ளிட்ட பல செலவுகளை மத்திய அரசு கணக்கில் சேர்க்காதது தான் நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட காரணம் ஆகும். இந்தக் குறைகளை களைந்து நெல்லுக்கான விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்.
மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கும் போது, அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவாவது சரி செய்வதற்காகத் தான் மாநில அரசுகளின் மூலம் ஊக்கத்தொகை வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், கடந்த ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகை வெறும் ரூ. 51 மட்டுமே உயர்த்தப்பட்டது. அதனால் தான் நடப்பாண்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 என்ற அளவை தாண்டவில்லை.
விவசாயிகளுக்கு செய்த துரோகத்திற்காக திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசும் அதே துரோகத்தைத் தொடரக் கூடாது. ஒதிஷா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்குகின்றன. அண்டை மாநிலமான கேரளத்தை ஆட்சி செய்த இடதுசாரி அரசு குவிண்டாலுக்கு ரூ.631 ஊக்கத்தொகை வழங்கியது. ஆனால், அதை ரூ.500 குறைவாகத் தான் முந்தைய திமுக அரசு வழங்கியது. உழவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தப்பட வேண்டும்.
நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதால், தமிழக அரசுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படாது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், குவிண்டாலுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க அரசின் சார்பில் ரூ.1059 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதற்காக அரசுக்கு ரூ.4,196 கோடி மட்டுமே செலவாகும். நடப்பாண்டில் குவிண்டாலுக்கு ரூ.131 வீதம் ஊக்கத்தொகை வழங்க ரூ.524 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை போக ஆண்டுக்கு ரூ.3,672 கோடி மட்டும் தான் கூடுதலாக செலவாகும்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்தத் தொகை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு தான். எனவே, உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை கிடைக்க வசதியாக ஊக்கத்தொகையை ரூ.1,059 ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.