பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கடந்த நான்கு நாள்களில் 4.88 இலட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று அதன் மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று 12.01.2026 நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1010 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஆக மொத்தம் 3,102 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,30,284 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 09.01.2026 முதல் 12.01.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி வரை, மொத்தம் 11,372 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,88,780 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 2,56,977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.