நல்லகண்ணு இறுதிநிகழ்வு தொடர்பாக எழுந்துள்ள விமர்சனத்துக்கு எடப்பாடி கே.பழனிசாமி கூறிய பதில் உண்மைக்குப் புறம்பானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இதுகுறித்து தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
”இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் 25.02.2026 ஆம் தேதி பிற்பகலில் வயது மூப்பு காரணமாக காலமானார். எதிர்கட்சித் தலைவர் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தத் தவறியதன் மீது பொது மக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதற்கு எதிர்கட்சித் தலைவர் “எனது தாயார் 2020-ல் காலமானபோது கம்யூனிஸ்ட்டு கட்சியினர் யாருமே வரவில்லை. இப்போது நான் ஏன் போகணும்” எனச் சொல்லியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது. ஆனால், எதிர்கட்சித் தலைவர் உண்மை பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் காலமானபோது, அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவிக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவுப்படி இப்போதைய மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி, பொருளாளர் தோழர் எம்.ஆறுமுகம் (முன்னாள் எம்எல்ஏ) இருவரும், அவரது கிராமத்து வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து, எடப்பாடியாரிடம் துக்கம் விசாரித்ததை ஏன் மறுத்தும், மறைத்தும் பேச வேண்டும்?
துக்க வீட்டில் அப்போதைய மதுவிலக்கு துறை அமைச்சர் திரு. பி.தங்கமணி, எம். ஆறுமுகம், நா.பெரியசாமி ஆகியோரை அறிமுகம் செய்தபோது “ஆறுமுகத்தை எனக்கு நல்லாத் தெரியும்” எனக் கூறியது மறந்துபோனதா?
இந்த நிகழ்வின்போது வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த, கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை இருவரும் “மாண்புமிகு முதலமைச்சர்” எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து, அவரது தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வந்தது அனைவரும் அறிந்த செய்தியாகும்.
எது எப்படியோ, அஇஅதிமுகழகம் நிறுவப்பட்ட காலத்தில் திரு எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிய, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியும், அதன் தலைவர்கள் எம். கல்யாண சுந்தரம், கே.பாலதண்டாயுதம், ப.மாணிக்கம் போன்ற தலைவர்களுடன் இணைந்து நின்றுவர் தோழர் இரா.நல்லகண்ணு என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
உண்மை பேசுங்கள். எதிர்கட்சித் தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள்...” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.