இராமதாஸ் 
தமிழ் நாடு

மாணவர்களுக்கு இரயில் பாஸ் பெற்றுத்தர வேண்டும் - இராமதாஸ்

Staff Writer

இரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களக்கு இலவச இரயில் பயண அட்டையை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

” தமிழ்நாட்டில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் 1999-ல் தொடங்கப்பட்டது. பின்னர் வந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசு பள்ளி, அரசுநிதி உதவிபெறும் பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கபெற்ற இலவச பேருந்து பயண அட்டையை பேருந்து நடத்துனரிடம் காண்பித்து கட்டணமின்றி இத்திட்டத்தின் மூலம் பயணிக்கலாம்.

இதற்காக ஆண்டொன்றிற்கு சுமார் 600 கோடி ரூபாய் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசால் வழங்கப்படுகிறது. ஆனாலும் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதும் சற்று தள்ளி நிறுத்துவதும் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இதனை தவிர்க்க மகளிர் பேருந்து போல பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவும் பள்ளி முடியும் நேரத்திற்கும் பின்பும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்தை இயக்க வேண்டும்.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்வி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறாமல் எமிஸ் EMIS (பள்ளி கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதள பதிவிலிருக்கும்) எல்லா மாணவர்களுக்கும் பேருந்து இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அறுபது லட்சம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழகப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே இரயில் நிலையங்களுக்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்கள் இரயிலில் பள்ளிக்கு பயணிக்கிறார்கள். அவர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மாதாந்திர பயண அட்டையை தங்கள் சொந்த செலவில் பெற்றுத் தருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் இரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசு இரயில்வே துறையில் 12 மாதங்களுக்குண்டான பணம் செலுத்தி, இரயிலில் பயணிக்க இலவச பயண அட்டையை பெற்றுத்தர வேண்டும்.” என்று இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.