தமிழ்நாட்டில் உள்ள வன்கொடுமை வழக்கு நீதிமன்றங்களில் 8 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டினார்.
இவற்றில் உள்ள பொறுப்பு நீதிபதிகள் வருவதில்லை என்றும் இந்த நீதிமன்றங்களில் வன்கொடுமை வழக்குகளில் சர்வசாதாரணமாக ஜாமின் தரப்படுகிறது என்றும் அதை எதிர்க்கும் அரசு வழக்கறிஞரை சாதிரீதியாகப் பார்க்கும் அவலம் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, இதுகுறித்து அமைக்கப்பட்ட நீதிபதி பாஷா ஆணையத்துக்கு பரிந்துரைகள் வழங்கும் அறிவித்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தி பேசுகையில், நிகழ்ச்சி அழைப்பிதழைப் பார்த்து நீதிபதி பாஷா தொடர்புகொண்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பரிந்துரைகளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியதாகக் குறிப்பிட்டார்.