தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பது குறித்த முயற்சிகளும், தமிழக மக்களின் மனங்களில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டு வாரியங்கள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது, இந்த விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
மேலும், ”ஸ்டெர்லைட் ஆலை என்பது சாதாரண தொழிற்சாலை அல்ல. தூத்துக்குடி மக்களின் உடல் நலம், குடிநீர், நிலம், கடல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதித்த வரலாற்றுச் சோகத்தின் நினைவுச்சின்னமாக உள்ளது.
அந்த ஆலையை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் ஜனநாயக முறையில் போராடிய போது, அரசின் துப்பாக்கிச் சூட்டில், நமது இரத்த சொந்தங்கள் உயிரிழந்த துயரம் இன்னும் தமிழ்நாட்டின் மனச் சாட்சியில் அழியாமல் நிற்கிறது.
இந்த நிலையில் எந்தக் காரணத்திற்காகவும் “பசுமைத் தாமிர ஆலை” என்றப் பெயரில் இருந்தாலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைப்பதோ, மறைமுக நடவடிக்கைகளை தொடங்குவதோ, தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
தமிழ்நாடு அரசு நிறுவன நலனுக்காக இயங்காமல், மக்களின் உயிர் பாதுகாப்புக்காக இயங்குவது தான் முதன்மையான அரசியல் கடமையாகும்.
அதன்படி, “ பூட்டப்பட்ட ஆலை” என்ற நிலை மட்டும் போதுமானதல்ல. எதிர்காலத்தில் எந்த அரசும் மீண்டும் திறக்க முடியாத வகையில், அங்கு உள்ள கட்டிடங்கள், இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி அமைப்புகள் அனைத்தையும் சட்டபூர்வமாக முற்றிலும் அகற்றி, அந்த நிலத்தைப் பொதுநலப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும், சரியான நீதியும் ஆகும்.
போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவுகளை மதிப்பதும், மக்களின் போராட்ட உணர்வை காப்பதும், தமிழ்நாடு அரசின் வரலாற்றுப் பொறுப்பாகும்.
எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான எந்த முயற்சிக்கும் இடமளிக்காமல், அதை நிரந்தரமாக அகற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.” என்று தமிழ்நாடு அரசையும், சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசு அமைப்புகளையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.