“நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்?” என இயக்குநர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்?
தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம்!
கடந்த காலங்களில் பொறாமையினாலும் வயிற்றெரிச்சலினாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது வன்மத்தை ஊடகங்களில் கக்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் யார் யார் என்பது இம்மக்களுக்கு புரியும்!
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் எல்லாம் இப்போது ஐயாவை புகழ்வது போல் புகழ்ந்து கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் மக்கள் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புறணிப்பேசி வயிறு வளர்க்கும் இத்தகைய சமூக வலைத்தளப் போராளிகளின் மானம் கெட்ட பிழைப்பு நெடுநாள் நடக்காது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்! காத்திருங்கள்!” என பதிவிட்டுள்ளார்.