ஷோபா சந்திரசேகருடன் விஜய் 
செய்திகள்

‘நீ அரியணை ஏறும் நாள் வரும்..’- விஜய்க்கு ஷோபா சந்திரசேகர் வாழ்த்து

Staff Writer

"வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.." என்று தவெக தலைவர் விஜய்க்கு அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவில் இருந்தே மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர்.

விடியற்காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டு வருகின்றனர். தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “முதல் மாநாடு உன் பலத்தை காட்டியது… மதுரை மாநாடு உன் படைபலத்தை காட்டுகிறது. திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை” என்று தெரிவித்துள்ளார்.