டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் 
செய்திகள்

டி.ஆர். பாலு மனைவி மறைவு: நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

Staff Writer

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவிக்கு (வயது 80) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.

அவரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர். பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தி. நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.