சீமான் - கு. ராமகிருஷ்ணன் 
செய்திகள்

‘சீமானை எங்கும் நுழையவிடமாட்டோம்’- சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் கைது!

Staff Writer

“தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறான செய்தியை பரப்பி வரும் சீமானை இனி எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம்" என தபெதிக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரை பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அவதூறான கருத்தை பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிட கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தபெதிக-வினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். சீமானுக்கு எதிராக தபெதிக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்த தபெதிக-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள சமூதாயக்கூடத்திற்கு கொண்டு சென்றனர். சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், "தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சீமான், பெரியாரை பற்றியும், பெண்களை இழிவுபடுத்தியும் சீமான் பேசி இருக்கிறார். அவரது பேச்சு எந்தவித ஆதாரமும் அற்றது. அவர் ஒரு கீழ்த்தரமான செய்தியை பெரியார் சொன்னதாக சொல்கிறார். அதற்கு அவர் ஆதாரம் தரவேண்டும்.

பெரியாருக்கு, பெரியார் என பெயர் சூட்டியது பெண்கள். உலகம் முழுவதும் உள்ள பெண்ணிய தத்துவவாதிகள் சொல்லாதவற்றையும் கூட பேசியவர் போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரை இழிவு செய்திருக்கிறார். சங் பரிவார் கும்பல் தான் இப்படிப்பட்ட தவறான பிரச்சாரத்தை செய்து வந்தது. அந்தப் பிரச்சாரத்தை நம்பி இப்படி பேசி இன்று தமிழ்நாட்டு மக்களிடத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் சீமான்.

கடந்த காலங்களில் சங் பரிவார் கும்பல்கள் இதே கருத்தைப் பேசினார்கள். பெரியார் சொன்னதாக விடுதலை நாளேட்டை ஆதாரமாகச் சொன்னார்கள். ஆனால், அதே தேதியிட்ட விடுதலை நாளேட்டையே எடுத்துப் போட்டு அந்த பிரச்சாரத்தை முறியடித்தோம். தொடர்ந்து அவதூறான செய்தியை பரப்பி வரும் சீமான் இனி எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.