விஷாலுடன் சாய் தன்ஷிகா 
செய்திகள்

‘அந்த ஜோடி மாதிரி சண்டை போட மாட்டோம்… தன்ஷிகா அற்புதமான பெண்’ - விஷால் நெகிழ்ச்சி!

Staff Writer

திருமணத்துக்குப் பிறகு சாய் தன்ஷிகா திரைப்படங்களில் நடிப்பதற்கு நான் எந்த தடையும் போடமாட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.

விழா மேடையில் சாய் தன்ஷிகா பேசியதாவது:

''இந்த மேடை எங்கள் திருமண தேதியை அறிவிக்கும் மேடையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதையே வெளியே சொல்லிக்கொள்ளலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், காலையில் செய்தித்தாளில் எங்கள் திருமணம் குறித்த தகவல்களைப் படித்ததும், இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனத் தீர்மானம் செய்தோம். நாங்கள் இருவரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம்.

15 ஆண்டுகளாக விஷாலை எனக்குத் தெரியும். நாங்கள் சந்தித்துக்கொண்ட பொது இடங்களில் எப்போதுமே மரியாதையாகவே நடந்துகொண்டார். எனக்காக பல இடங்களில் குரல் கொடுத்துள்ளார். வேறு எந்தவொரு நாயகனும் எங்கள் வீட்டிற்கு வந்ததில்லை. பிரச்னையின்போது கூட, எங்கள் வீட்டிற்கு வந்து துணையாக உடன் நின்றார்.

இருவரும் சமீபகாலமாகத்தான் பேசிவருகிறோம். எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உணர்வை பரிமாறிக்கொண்டோம். பரஸ்பரமாக ஏற்றுக்கொண்டோம். இது கல்யாணத்தின் தொடக்கமாகதான் இருக்கப்போகிறது என்பதை தெரிந்துகொண்டோம். இனி ஏன் தாமதம்? ஒரே விஷயம்தான், எனக்கு அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஐ லவ் யூ'' எனக் குறிப்பிட்டார்.

இவரைத் தொடர்ந்து பேசிய விஷால், “சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஓர் அற்புதமான பெண். கண்டிப்பாக சினிமாவில் வடிவேலு - கோவை சரளா போன்று சண்டை போடும் ஜோடியாக நாங்கள் இருக்கமாட்டோம். காரணம், அந்த சண்டை காட்சிகளை பார்க்கும்போது நான் கொஞ்சம் சூதானமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எங்களுக்குள் சண்டை வராது.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தான் சொல்வேன். கடவுள் எப்போதுமே சிறந்ததை கடைசியில் தான் தருவார். நாங்கள் இருவரும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்க உள்ளோம். திருமணத்துக்குப் பிறகு தன்ஷிகா நடிப்பாரா என்று கேட்டிருந்தீர்கள். அவர் சத்தியமாக நடிப்பார். அதற்கு எந்த ஒரு தடையும் நான் போட மாட்டேன்” என்று விஷால் கூறினார்.