சுதந்திர நாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.
அப்போது, அவர் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்...
* மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மேற்சொன்ன ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும்.