இளையராஜா 
செய்திகள்

இந்தியாவில் ஏன் சிம்பொனியை பதிவு செய்ய முடியவில்லை! – இளையராஜா ஆதங்கம்

Staff Writer

தளபதி படத்தின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, மூடுபனி படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’, சிவப்பு ரோஜாக்கள் படத்தின் ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடல்களில் வரும் பின்னணி இசை ஒரு சிம்பொனி வடிவம்தான் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

தி இந்து யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

“மேற்கத்திய நாடுகளில் இருந்த சிம்பொனி இசையை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த, 50 வருடங்களுக்கு முன்னரே என்னுடைய பாடல்களில் சிம்பொனியை பயன்படுத்தினேன்.

‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடல்களில் வரும் பின்னணி இசை ஒரு சிம்பொனி வடிவம்தான். சிம்பொனி என்பது உலக மாமேதைகள் எழுதி வைத்திருப்பது. அதை நாம் கேட்க வேண்டும் என்றால் பத்து ஜென்மம் நமக்கு தேவைப்படும். நான் இசையமைத்த ஒரு சினிமா பாடல் ஹிட்டடித்து விட்டது என்றால், அதனை முறியடிக்கும் வேறொரு பாடலை நான் தான் அமைக்க வேண்டும். ஆனால் சிம்பொனி இசையை பொறுத்தவரை அவ்வாறு செய்ய இயலாது.

சிம்பொனி என்றால் நான்கு கவிஞர்கள் எழுதும் வெவ்வேறு கவிதையை ஒரே நேரத்தில் இசையாக கொடுப்பது. சிம்பொனியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கர்நாடக இசையில் உள்ள பல்லவி, அனு பல்லவி மற்றும் சரணம் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். சிம்பொனி இசையை வேறு யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் புரியாது. அதை நீங்கள் கேட்டு அனுபவித்தால் மட்டுமே புரியும்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது ஆறு சிம்பொனி இசைக்குழுக்கள் இந்தியாவில் இருந்தன. மைசூரில் இருந்த ஓர் இசைக்குழு தசரா அன்று சிம்பொனி இசையை நிகழ்த்த ஒரு வருடம் பயிற்சி எடுப்பார்கள். தற்போது ஓர் இசைக்குழு கூட இல்லை. இதன் காரணமாகவே என்னால் இங்கு சிம்பொனி இசையை இந்தியாவில் பதிவு செய்ய முடியவில்லை.” என்றார் இளையராஜா.