ஆளுநர் ஆர்.என். ரவி 
செய்திகள்

உரையை புறக்கணித்தது ஏன்? -ஆளுநர் மாளிகை விளக்கம்!

Staff Writer

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக தமிழில் வாசித்தார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், “இந்திய அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் இன்று அவமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தேசிய கீதத்தை மதிப்பது என்பது முதன்மையான அடிப்படையான கடமையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை தொடங்கும் முன்னர் தேசிய கீதமே இசைக்கப்படுகிறது. அதேபோல் அனைத்து சட்டப்பேரவைகளிலும் தேசிய கீதம் தான் கூட்டத் தொடர் தொடங்கும் போதும், முடியும் போதும் இசைக்கப்படுகிறது.

ஆனால் இன்று ஆளுநர் வருகையின்போது அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் அவைக்கு இதனை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை இசைத்து அவை தனது அரசமைப்பு கடமையை செய்யும்படி அவைத் தலைவருக்கும், முதல்வருக்கும் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது உற்று கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையில் அமளி:

அவை கூடியவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகத் தெரிகிறது. அவையைப் புறக்கணித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, “ஆளுநர் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார். மாற்று அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார். இது ஜனநாயக விரோத போக்கு. கூட்டாட்சிக்கு எதிரானது.” என்று கூறினார்.