ஜார்ஜியாவில் விசவாயு தாக்கி 11 இந்தியர்கள் பலி 
உலகம்

ரிசார்ட்டில் விசவாயு கசிவு… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி!

Staff Writer

ஜார்ஜியாவில் உள்ள ரிசார்ட்டில் கார்பன் மோனாக்சைடு வாயு கசிவு பாதிப்பால் 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவுக்கு கல்வி, வேலை வாய்ப்புக்காக இந்தியர்கள் ஏராளமான பேர் இந்நாட்டுக்கு செல்கின்றனர்.

இங்குள்ள குதாவ்ரி பகுதியில் மலையின் மீது ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட்டில் திடீரென கார்பன் மோனாக்சைடு விஷ வாயு பரவியது. இதனால் அங்கிருந்த 12 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

பலியானவர்கள் அனைவரும் ரிசார்ட்டில் பணிபுரிந்தவர்கள் என்றும், 12 பேரில் 11 பேர் இந்தியர்கள் எனவும் தெரியவந்துள்ளது. ரிசார்ட்டின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பணியாளர்கள் பலியான சம்பவம் குறித்து திபிலிசியில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் சொல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து நேரில் சென்று பார்த்து விசாரித்த இந்திய துாதரக அதிகாரிகள் கூறியதாவது:

கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி, இந்தியர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான இந்தியர்களுக்கு எதிராக, வன்முறை ஏதுவும் நிகழ்த்தப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளோம்.

இறந்தவர்களின் உடலைத் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்கிறோம்.

கவன குறைவால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் 116 வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.