உக்ரைனிலிருந்து புறப்பட்டுச் சென்ற வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து 'எச்.வி. கோல்டன் லியோ' என்ற சரக்குக் கப்பல் புறப்பட்டுச் சென்றது. அதன்மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு இந்தியர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தியா, சிரியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள், கினியா-பிஸ்ஸாவ் நாட்டுக்கொடியுடன் இந்த வணிகக் கப்பலில் பயணம் செய்துள்ளனர். துறைமுகத்தைவிட்டு கப்பல் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, ரஷ்யாவின் ஏவுகணைகள் இந்தக் கப்பலைத் தாக்கின.
இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள், வணிகக் கப்பல்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், சர்வதேச கடல் வழிச் சுதந்திரத்திற்கும் வர்த்தகப் பாதுகாப்பிற்கும் எதிரானவை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்ய தூதரக அதிகாரியிடம் இந்தியா விளக்கம் கேட்டுள்ளது.