சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியவைச் சேர்ந்த 42 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில், டீசல் டேங்கர் லாரியின் மீது திங்கள்கிழமை அதிகாலை பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 இந்தியர்கள் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணம் மேற்கொண்டவர்களில் பெரும்பாலும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், 20 பெண்கள், 11 குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம், “இந்த விபத்தில் சிக்கிய தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சவுதி அரேபியா நாட்டு அதிகாரிகளிடம் விவரங்களைச் சேகரிக்க கோரி தில்லியில் உள்ள தெலங்கானா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.