ஓபன் ஏஐ  
உலகம்

இதெல்லாம் எங்கேபோய் முடியுமோ? 90 ஆண்டுகால கணிதப் புதிருக்கு 88 மணி நேரத்தில், ஏஐ தீர்வு...

ம.தினோவிகா

கடந்த 90 ஆண்டுகளாக விடை கண்டுபிடிக்க முடியாமல் இருந்த கணக்கிற்கு ஓபன் ஏஐ 88 மணி நேரத்தில் தீர்வைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நேவியர் – ஸ்டோக்ஸ் எனப்படும் திரவங்கள் – வாயுக்களின் இயக்கத்தைப் பற்றிய ஒரு கணிதப் புதிருக்கு ஓபன் ஏஐ விடை கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் வெளியிடப்படாத ஏஐ மாடல் ஒன்றின்மூலம் இதைச் செய்ததாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த கணிதப் புதிரைத் தீர்த்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு என க்ளே கணித நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

“ நாங்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்ட நேவியர் – ஸ்டோக்ஸ் கணக்கிற்கான பதிலை பகிர்ந்துள்ளோம். இந்த கணக்கிற்கான தீர்வின் எழுத்துப்பூர்வ ஆதாரம், கணித வழியில் பதில் கொண்டுவந்ததற்கான வழிமுறைகளையும் முழுமையாக அளித்துள்ளோம்.

இந்த கணக்கிற்கான தீர்வைக் கண்டுபிடிக்க நியூட்டனின் இரண்டாவது விதி, யூலரின் விதி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, நாங்கள் ஒரு புதிய அதிவேக ஏஐயை உருவாக்கினோம். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, இந்த நேவியர் – ஸ்டோக்ஸ் கணக்கிற்கான தீர்வு காணப்பட்டதாக புரளிகள் கிளம்பின.

இந்தப் புரளிகளின் உந்துததால், இந்த கணக்கை நாங்களே தீர்ப்போம் என்ற சவாலை ஏற்றுக்கொண்டோம்.

இதைதொடர்ந்து, வெளியிடப்படாத இந்த புதிய ஏஐ மாடலைப் பயன்படுத்தி, இந்த கணக்கிற்கு தீர்வு காண முயன்றோம்.

பல்வேறு குழுக்களாக பிரித்து, 10,000 ஏஜென்டுகளுடன் முயற்சியைத் தொடங்கினோம்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, இந்த நேவியர் – ஸ்டோக்ஸ் கணக்கிற்கான தீர்வை எங்கள் புதிய ஏஐ மாடல் கண்டுபிடித்தது. இந்த தீர்வை ஜி.பி.டி-6 ஆஸ்ட்ராவின் உதவியுடன் கூடுதலாக 17 மணிநேரம் சரிப்பார்த்தோம்.

இறுதியாக, 2.7 மில்லியன் மெசேஜ்களுடன், 130 ஒவுட்புட் டோக்கன்களுடன் இந்த சமன்பாட்டிற்கானத் தீர்வைக் கொண்டுவந்துள்ளோம்' என ஓபன் ஏஐ கூறி உள்ளது.

''எங்களுடைய நோக்கம் 1 மில்லியன் டாலர் பரிசைப் பெற வேண்டும் என்பதல்ல; ஏஐ மாடல்களின் மேம்படுத்தப்பட்ட திறனை வெளிக்கொண்டு வருவதே ஆகும்." என்று ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே,ஓப்பன் ஏ ஐ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆந்தரோபிக்கில் பணியாற்றும் ஓர் ஊழியரும் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் டிரிஸ்டனும் இணைந்து இதற்கான தீர்வைக் கொண்டுவந்துள்ளதாக கூறினர். இதைத் தொடர்ந்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க மனித மூளைக்கு ஏ ஐ மூலம் சவால் விடுவது தொடர்ந்து கொண்டே இருப்பது கவலையை பல சமூக நோக்கர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram