தென் சீனக் கடலில் ஆன்டெலோப் கடல்திட்டு பகுதியில், செயற்கைத் தீவை சீனா உருவாக்கியுள்ளது. இது வலுவான ராணுவத் தளமாக உருவாக வாய்ப்பிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இங்கு செயற்கையாக 6 கி.மீ. நீளமுள்ள புதிய நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு துறைமுகம், கப்பல்கள் நிறுத்தும் வசதி, 3 கி.மீ.க்கும் அதிகமான நீளமுள்ள ஓடுபாதைக்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்கைக்கோள் படங்களில் 50-க்கும் மேற்பட்ட சிறிய கட்டடங்கள், ஹெலிபேட், நீண்ட கப்பல் துறைமுகக் கட்டமைப்பு ஆகியவை இந்த இடத்தில் காணப்படுகின்றன.
வானிலை ஆய்வு, ஆராய்ச்சி உட்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத்தான் இந்த செயற்கை தீவை உருவாக்கி இருப்பதாக சீனா கூறுகிறது.
ஆனால், பாதுகாப்பு ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் இங்கு கண்காணிப்பு அமைப்புகள், விமான, கடற்படை வசதிகள் உட்பட்ட ராணுவ உட்கட்டமைப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர்.
வியட்நாமிலிருந்து 400 கி.மீ. தொலைவில், சீனா இந்த செயற்கைத் தீவை ஏற்படுத்தியுள்ளதால், வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.