வட துருவ ஒளி எனப்படும் 'அரோரா போரியாலிஸ்', இந்தியாவில் தென்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் தென்படும் இந்த ஒளி, இந்தியாவின் நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ, காஷ்மீரின் சில பகுதிகள், உத்தரகாண்டில் உள்ள இமயமலையின் உயர்ந்த பகுதிகளில் இன்றிரவு தென்படலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டர் உயரத்தில் உள்ள லடாக்கின் ஹான்லே- இந்திய வானியல் ஆய்வகத்தில் இந்த ஒளியை தெளிவாகக் காணமுடியும்.
'அரோரா போரியாலிஸ்' என்பது சூரியனில் இருந்து வரும் மின்னூட்டம் பெற்ற துகள்கள் (எலக்ட்ரான்கள், புரோட்டான்கள்) பூமியின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு, மேல் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மோதும் போது இந்த வண்ண ஒளி தோன்றும். இவை ஆக்ஸிஜனுடன் மோதும்போது பச்சை, சிவப்பு நிறங்களிலும் நைட்ரஜனுடன் மோதும் போது நீலம், ஊதா நிறங்களிலும் தென்படும்.
இதற்கு முன்னர், ஜனவரி 19-ல் லடாக்கின் ஹான்லேவில் சிவப்பு நிற துருவ ஒளி தென்பட்டது குறிப்பிடத்தக்கது.
இயற்கை நிகழ்த்தும் அதிசயங்களில் ஒன்றான இந்தத் துருவ ஒளியை, இன்றிரவு 10 மணி முதல் 2 மணிவரை இந்தியாவில் கடல்மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள இடங்களில் இருப்பவர்கள் கண்டுகளிக்க வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.