சீனாவில் ராக்கெட்டை விண்ணில் ஏவிய பிறகு, சில நிமிடங்களில் அதன் முதல் கட்டப் பகுதியான பூஸ்டர் பாகத்தை பத்திரமாக இறக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குப் பின்னர் இவ்வாறான சாதனையைப் புரிந்த இரண்டாவது நாடு சீனா ஆகும்.
ராக்கெட் ஏவுதலில் அதன் பாகங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால், ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவுதலின்போதும் அதிகப்படியாக செலவு ஆகிறது.
இந்த மாதிரியான செலவினங்களைக் குறைப்பதற்காக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாகங்களைத் தயாரிக்க பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி ஆறு நிமிடங்களில் கடலில் அமைக்கப்பட்ட மிதவை அமைப்பில் தரையிறக்கி சீனா சாதித்துள்ளது.
பூஸ்டர் பகுதியை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே செயற்கைக்கோள் ஏவுதல், விண்வெளி ஆராய்ச்சி செலவுகளை பன்மடங்கு குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2015ல் பால்கன்-9 ராக்கெட்டை வெற்றிகரமாகத் தரையிறக்கியது. தற்போது பால்கன்-9 மூலம் ஆண்டுக்கு சுமார் 150 முறை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.