பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தால் உருக்குலைந்த கட்டிடம் 
உலகம்

பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை!

Staff Writer

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிண்டானாவ் தீவுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 93 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், 7.8 ரிக்டர் என பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்னர், மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 79 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், இதுவரை ஒருவர் பலியாகியுள்ளதாகவும், நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அப்பகுதியில் கடல் அலைகள் 1.4 மீட்டர் உயரம்வரை எழுந்தன.

மேலும், இந்நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.