பல்வேறு நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தொடர்ந்து கட்டுப்படுத்திவரும் நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடைசெய்யும் மசோதாவை நியூசிலாந்து அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது:
"16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை செய்யும் மசோதாவை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இதை மீறும் சமூக ஊடக நிறுவனங்கள், அவர்களின் உலகளாவிய வருமானத்தில் 10% வரை அபராதம் செலுத்த வேண்டும்.
சமூக ஊடகப் பக்கங்களில் ஏற்கனவே உள்ள கணக்குகளின் விவரங்களை முகத்தொழில்நுட்பம், டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் ஆகியவற்றின் உதவியுடன், பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும்.
நியூசிலாந்து குழந்தைகளுக்கு இழைக்கப்படும் தீங்கை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக ஊடகங்கள், அவர்களை அடிமையாக்குகிறது. மேலும், குழந்தைகளுக்கு சமாளிக்க முடியாத அளவிற்கு அழுந்தத்தைக் கொடுப்பதுடன், அது அவர்களின் மனநலம், உறக்கம், கல்வி ஆகியவற்றையும் பாதிக்கிறது.” என்று லக்சன் கூறினார்.
முன்னதாக, முதன்முதலாக கடந்த டிசம்பரில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்டாக், யூ-டியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகியவற்றைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, பிரிட்டன், சீனா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பிற நாடுகளும் குழந்தைகள் சமூக ஊடகப் பயன்பாட்டுக்குத் தடை விதித்தன.