சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி 
உலகம்

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

Staff Writer

2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த க்யோடோ பல்கலை பேராசிரியர் சுசுமு கிடகவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலை பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியர் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான மேம்பாட்டு ஆராய்ச்சிக்காக பல்கலை பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியலுக்கான ராயல் சுவதேஷ் அகாதமி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பின் காரணமாக, பல்வேறு துறைகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.6ஆம் தேதி, திங்கள்கிழமை மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத் துறைக்கு வியாழக்கிழமையும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதேபோல் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ஆம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளன.

ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.