உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் 68 ஏவுகணைகள், 350-க்கும் மேற்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தத் தாக்குதலால் குடியிருப்புக் கட்டடங்கள், வணிக வளாகங்கள் உட்பட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளன.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அவசர மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தத் தாக்குதலுக்கு சற்று நேரத்திற்கு முன்னர்தான், பேட்ரியாட் ஏவுகணைகள், இந்த டிரோன் தாக்குதலை தற்காத்துக்கொள்ள உதவும் என்றும், அவற்றை மேலும் வழங்குமாறும் மேற்கத்திய நட்பு நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனும், ஆளில்லா விமானங்களை ஏவி, ரஷியாவின் முக்கிய எண்ணெய்த் தளங்களைத் தாக்கியுள்ளது.
நேட்டோ உச்சி மாநாட்டுக்கு முன்னர் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல், ரஷ்யா – உக்ரைன் போரின் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.