தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் 32 பேர் உயிரிழந்ததுடன் 700 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் துறைமுக நகரமான லா குய்ரா மிகுந்த சேதத்தைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இரண்டு நிலநடுக்கங்களும் ரிக்டர் அளவுகோலில் 7.1, 7.5 ஆகப் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர் 1900ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 7.7 ரிக்டர் அளவுகோலுடன் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான்!
வெனிசுலா நாட்டின் கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் கான்கிரீட் கூரைகள், லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காணாமல்போனவர்கள் குறித்த தகவல்களுக்கு 'வென்' ஆப்பை பயன்படுத்துமாறு டெல்சி கேட்டுக்கொண்டுள்ளார்.