அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த மாதம் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஒப்பந்தத்தில் இருந்த விதிகளை ஈரான் மீறியதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, ஈரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
இந்தப் போரின் தாக்கம் தற்போது உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை பாதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகக் கப்பல்கள் மீது ஈரானின் குரூஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 இந்தியர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குவது சர்வதேச கடல் சட்டங்களுக்கு எதிரானது என்றும், ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் நிலையில், அந்த பாதுகாப்புச் சேவைக்காக 20% கட்டணம் வசூலிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் 20% கச்சா எண்ணெய் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படுவதால், இந்தப் போர் நீடித்தால் எண்ணெய் விலை, சர்வதேச வர்த்தகம், உலகப் பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.