பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், அடியாலா சிறைச்சாலைக்குள் வைத்து, இம்ரான் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், சில சமூக ஊடகப் பக்கங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் அடியாலா சிறைக்கு இம்ரானை சந்தித்த வந்த அவரது சகோதரிகளான நோரீன் நியாசி, அலீமா கான் மற்றும் உஸ்மா கானை காவல் துறையினர் தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, இம்ரானின் ஆதரவாளர்களும் சிறை வாயிலில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில், அவரை யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, கைபர் - பக்துங்க்வா மாகாண முதலமைச்சர், இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு, அஃப்ரிடியும் அவரை சந்திக்க தொடர்ந்து சென்றாலும் பார்க்க முடியவில்லை என்று செய்திகள் வெளியானதால், அவரது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்களும் பரவி வருகின்றன.