கெளதம் அதானி - ஜாங் யிமிங் 
உலகம்

கெளதம் அதானியை பின்னுக்குத் தள்ளிய ஜாங் யிமிங் யார்?

ம.தினோவிகா

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யிமிங், கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், 13 பில்லியன் டாலராக இருந்த ஜாங் யிமிங்கின் சொத்து மதிப்பு, தற்போது எட்டு மடங்கு உயர்ந்து 105 பில்லியன் டாலராக இருப்பதாக புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் எனப்படும் பிரபலமான செயலியின் இணை நிறுவனரான ஜாங் யிமிங், பைட்டான்சின் முக்கிய டிஜிட்டல் தளங்கள், செயற்கை நுண்ணறிவுத் துறையில் கவனம் செலுத்தியதன் விளைவாக, தற்போது ஆசியாவின் அதிக சொத்து மதிப்புள்ள நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு, உலகச் சந்தையில் டிக் டாக் எனும் செயலியை அறிமுகப்படுத்தினார். பின்னர், 800 மில்லியன் டாலர் கொடுத்து மியூசிக்கலியை வாங்கி டிக் டாக் செயலியுடன் இணைத்தார். அதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் செயலியாக டிக் டாக் உருவெடுத்தது.

பின்னர், இவர் ஏஐ பக்கம் கவனத்தைத் திருப்பினார். இந்த முயற்சியே இந்த இடத்தைப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

டிக் டாக் செயலி பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், உலக அளவில் இன்னும் பிரபலமான செயலியாக உள்ளது.

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஜாங் யிமிங்கின் சொத்து மதிப்பு 105 பில்லியன் டாலராக உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram