சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடிதலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது டாஸ்மாக்ஊழல் பற்றிப் பேசவிடவில்லை என அவர் நீண்ட விளக்கம் அளித்தார்.
அது முடிந்தபின், மைய நிதியமைச்சர் நிர்மலாவை அ.தி.மு.க. நிருவாகி செங்கோட்டையன் சந்தித்துள்ளாரே எனக் கேட்க, சிரித்தபடியே சற்று ஆவேசமாக பதில்சொன்னார், எடப்பாடி பழனிசாமி.
“ இதற்கும் அதற்கும் என்ன... யார் வேண்டுமானாலும்... ” என தடுமாறியபடிப் பேசிய அவர், “இதைச் சந்திக்கிறதை ஒரு பெரிய விசயமா ஊடகங்களில காட்டுறீங்க. வேறு வழியில்லை. எதையாவது பேசி அ.தி.மு.க.வைக் குறைசொல்வது போக்காக இருக்கிறது. இதை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஆக்கபூர்வமான பிரச்னையைக் கேளுங்க.” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
என்ன நினைத்தாரோ உடனே மீண்டும் ஊடகங்களின் ஒலிவாங்கிகளுக்கு முன்பாக மீண்டும் வந்தவர்,” இவ்வளவு கேள்வி கேக்குறீங்களே, இன்றைய தினம் அமைச்சர் நேருவின் சகோதரர், அவரைச் சார்ந்த நிறுவனங்களில் ரெய்டு நடக்கிறது. அதை யாராவது கேக்குறீங்களா? தி.மு.க. குறித்து எந்தக் கேள்வியும் கேட்கமாட்டேங்கிறீங்க. முதலமைச்சரிடமும் துணைமுதலமைச்சரிடமும் இதைப் பற்றி கேட்பதே இல்லை. நாட்டு மக்கள் பிரச்சினை குறித்து எந்தக் கேள்விக்கும் பதில்தர நான் தயார்.” என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமாகக் கூறினார்.