செய்திகள்

கருணாநிதி சமாதி மீது சாமி கோபுரமா?- பா.ஜ.க. சீற்றம்!

Staff Writer

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதியின் மீது மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது வாடிக்கை. அதில், இன்று இந்துசமயத் துறையின் மானியக் கோரிக்கையை சட்டப்பேரவையில் அளித்ததை முன்னிட்டு அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு, அங்கு கோயில் கோபுரத்தை மலர்களால் உருவாக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவையில் தாக்கல்செய்யும்முன்னர் அவர் அங்கு சென்று மரியாதை செய்தார். அந்தப் படங்கள் வெளியானதையடுத்து பா.ஜ.க. தரப்பில் அதைக் கண்டித்து வருகின்றனர்.  

அக்கட்சியின் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த திரு. கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் @arivalayam அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

” "பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?

சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் திரு. @PKSekarbabu அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.” என்றும் நயினார் கேட்டுக்கொண்டுள்ளார். 

முன்னதாக, இதுகுறித்து முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.