தமிழக மீனவர்கள் இலங்கையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர்த் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று அந்நாட்டின் கடற்தொழில் துறை அமைச்சர் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னர் தமிழக, காரைக்கால் மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டு இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்தநிலையில், இந்த விவகாரத்தில் இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. அதையடுத்து, அந்நாட்டு கடல் தொழில், நீரியல் வளங்கள் துறை அமைச்சர் சந்திரசேகர் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகத்தினரிடம் பேசியபோது, இவ்வாறு கூறினார்.
”நாங்கள் பல முறை இந்திய தமிழக மீனவர்களிடம் தயவாகக் கேட்டுவிட்டோம். அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம்; எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று... ஆனால் அவர்கள் எம் மீனவர்களை துன்பப்படுத்துகின்றனர். இதை எக்காரணம்கொண்டும் அனுமதிக்க முடியாது.” என்று சந்திரசேகர் கூறினார்.