நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் (கோப்புப் படம்)
செய்திகள்

தவறிப் பெய்த மழையால் 1 இலட்சம் பயிர்கள் சேதம்- தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை பாதிப்பு!

Staff Writer

பருவம் தவறி பெய்த கனமழையினால் காவிரிப்பாசன மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஒரு இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளன என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

”காவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போயுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசு, மழை வெள்ள பாதிப்படைந்த பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு கணக்கிடுவதுடன், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், பிற பயிர்களுக்கு அதன் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கிட வேண்டும்.” என அக்கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் 17 சதம் ஈரப்பதம் இருந்தால் எடுப்பது என்ற வழக்கத்தை மாற்றி 22 சதம் வரை உயர்த்தி நெல்கொள்முதல் செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துவதாக அதன் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.