செய்திகள்

பாம்பனில் ரூ.60 கோடி, தங்கச்சிமடம், குத்துக்கல்லில் தலா ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள்!

Staff Writer

ம்த்திய அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் மீனவர்களுக்காக புதிய துறைமுகத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110ஆம் விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் அவர் இதைக் கூறியுள்ளார்.

அவையில் முதலமைச்சர் பேசியது : 

”ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாம் தவறமாட்டோம். கழக அரசு அவர்களுக்குத் எப்போதும் துணை நிற்கும். மீனவர்களது  பொருளாதாரத்தை மேம்படுத்தல், அவர்களது மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன்பிடிப்பிற்குச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களைக் களைவதற்கு ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும்கூட, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து நமது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும், அந்தப் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதுமான செயல்கள் நம்முடைய தொடர் வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் மீறி நடைபெற்றுவருகிறது.

எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றை தங்கள் வாயிலாக இப்பேரவைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

(1) மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்.

(2) 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன் பகுதியிலும் மற்றும் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் குந்துக்கல் பகுதியிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன்.

இவற்றைத் தவிர, மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த சில புதிய வாழ்வாதாரத் திட்டங்களையும் செயல்படுத்திட பின்வரும் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கின்றேன்:

1. கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7000 பயனாளிகளுக்கு 52 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

2. கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள 25 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் உபகரணங்கள் வழங்கி, தொடர்பணிகளும் மேற்கொள்ளப்படும். 

3. மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் சுமார் 2,500 மீனவக் குடும்பங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு 9 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். 

4. சுமார் 15 ஆயிரத்து 300 மீனவர்களுக்கு, மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கிட 20 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.

5. மீன் வளம் சார்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமானத் தொழில் படகு பழுதுபார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல்சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய 54 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

6. மீன் வளம் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர, குறிப்பாக, காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டுமுறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்கள் செய்ய  சுமார் 14 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு, 53 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளும்,  அரசு துறைகளும் இணைந்து இத்திட்டங்களைச் செயல்படுத்தும். இந்தத் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்டக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் திட்டச் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து மேம்படுத்தும் பொருட்டு, இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் 360 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 216 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவிடப்படும். மொத்தம் 576 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களால் மன்னார் வளைகுடா பகுதியைச் சார்ந்த மாவட்டங்களின் மீனவர்கள் பெரிதும் பயனடைவார்கள்; (மேசையைத் தட்டும் ஒலி) அவர்களுடைய வாழ்வாதாமும் மேம்படும்.

அதுமட்டுமல்ல; நமது மீனவ சகோதரர்களின் குடும்பத்தினர் கூடுதல் வாய்ப்புகள் பெற்று, அதிகமான பொருளீட்ட வழிவகை ஏற்படுத்தப்படும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.