செய்திகள்

பி.கே. மூக்கையாவுக்கு மணிமண்டபம் - கி.வீரமணி வரவேற்பு!

Staff Writer


சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே. மூக்கையாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

அவர் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

”மக்களவை உறுப்பினராகவும், பலமுறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்  மூக்கையா தேவர் ஆவார். 1952 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பெரியகுளத்தில் போட்டியிட்டபோது, அவரை ஆதரித்து தந்தை பெரியார் உரையாற்றியுள்ளார்.

கச்சத்தீவை இந்திய அரசு, இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அப்போது இராமநாதபுரம் மக்களவை உறுப்பினராக இருந்த மூக்கையா அதனைக் கடுமையாக எதிர்த்து, வெளிநடப்பு செய்தவர்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் அண்ணா அவர்கள், இருமொழி திட்டத்தை அறிவித்தபோது, அதற்கு ஆதரவாக நின்று உரையாற்றியவர்.

குறிப்பிட்ட ஜாதியினர் குற்றப் பரம்பரை என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பட்டியலிடப்பட்டபோது, அதனை முறியடிப்பதில் முன்னணியில் இருந்தவர்.

உசிலம்பட்டி, நீலிதநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் கல்லூரிகளை நிறுவியவர்.

ஏழை, எளிய மாணவர்கள், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கு இலவச கல்வியோடு தங்கும் இடம், உணவு ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தவர்.

அத்தகைய பெருமகனாரின் நினைவைப் போற்றும் வண்ணம் மணிமண்டபம் எழுப்ப இருப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதும் – பாராட்டத்தக்கதும் ஆகும்.” என்று கி.வீரமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.