செய்திகள்

பிளாக்மெயில் செய்யும் தடித்தனம்- முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்!

Staff Writer

மும்மொழிக் கொள்கையை வைத்து பிளாக்மெயில் தடித்தனம் செய்கிறது மத்திய அரசு என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் இதுகுறித்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு:

” ’They have to come to the terms of the Indian Constitution’ என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தன் சமூக ஊடகப் பக்கத்தில் இதுகுறித்து எழுதியுள்ளார்.

அதில், ”தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மொழி, இன உணர்வு வந்த பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகுதான், தோளில், பதவி எனும் துண்டு வந்தது.

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?

தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயைத் தீண்டுவதற்குச் சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.

மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது!” என்று கூறப்பட்டுள்ளது.