பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதில் பெரிதாக எதுவும் நடக்காதது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் 110ஆவது விதியின்படி மீனவர்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, கடந்த 2-4-2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கச்சத்தீவை மீட்க வேண்டுமென்றும், இலங்கை சிறையில் வாடும் நம் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தோம். இலங்கை சென்றிருந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதிலே குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீர்மானத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.
இந்த நிலையில், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர் விடுதலை மற்றும் கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கி வரக்கூடிய செய்தியாகும். ஒன்றிய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.