இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் செயல்பட்ட காலத்தில் அந்தப் பகுதியின் தளபதிகளாக இருந்தவர்கள் கருணா அம்மான் என்கிற முரளிதரன், பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர். ஆயுதப் போராட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் தேர்தல் அரசியலில் புகுந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் செயல்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பிள்ளையானும், இலங்கை மத்திய அரசின் அமைச்சராக கருணாவும் பதவிவகித்தனர். மத்தியில் மாறிமாறிவரும் அரசாங்கங்களில் செல்வாக்கு பெற்றவராக கருணா இயங்கினார். ஆனால் அறகலய போராட்டத்தை அடுத்து இருவருக்குமே நெருக்கடி ஏற்பட்டது.
இடையில் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் பிள்ளையானால் முதலமைச்சர் பதவியில் வெற்றிபெற முடியவில்லை. கருணாவும் தனிக் கட்சி தொடங்கியிருந்தார்.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு பேரும் இணைந்து போட்டியிட முடிவுசெய்துள்ளனர். படகு சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானித்துள்ளனர்.