பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்  
செய்திகள்

வசந்த காலம், இந்திர விழா- இராமதாஸ் வாழ்த்து!

Staff Writer

தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரைத் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள சித்திரைத்திருநாள் வாழ்த்துச்செய்தியில், “ சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்  என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.” என்று தொன்மையான சிறப்புகளை விவரித்துள்ளார்.  

”சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான்.  அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். வழக்கம் போலவே இந்த சித்திரையும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும்.

சங்க காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழர்கள் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றால் நிறைக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக தமிழர்களின்  தொழில்கள் சிறக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும்.” என்றும் இராமதாசு தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.