வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்று போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட்ட பலரும் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வகையில் அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.” என்று சிவசங்கர் கூறியுள்ளார்.