தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் 100 வயது கண்ட மிக மூத்த நிர்வாகியை நேரில் சென்று இன்று வாழ்த்தினார்.
அவர், சோ.மா. இராமச்சந்திரன். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்.
இதுகுறித்து ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள குறிப்பு :
“ கொள்கை நெறி தவறாத பாதையில், கடும் உழைப்பால் முன்னேறியவரும் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நூறாண்டுகளைக் கடந்து கழகத்தின் மூத்த முன்னோடியாக நமக்கெல்லாம் திசைகாட்டியாக வாழ்பவருமான சோ.மா.இராமச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி பகுதியில் பிறந்து, பின்னர் சென்னையில் குடியேறி, தேநீர்க் கடை ஒன்றை நடத்தி, தனது உழைப்பால் உயர்ந்த அவர், திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். மிசாவில் சிறை கண்டவர். 30 ஆண்டுகாலம் பகுதிச் செயலாளர், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் தொண்டாற்றி அண்ணா நகர் வாழும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டபோது, அவர்களது வெற்றிக்காகக் களப்பணியாற்றியவர்.
முன்னத்தி ஏராகக் கழகத்தினருக்கு வழிகாட்டும்
சோ.மா.இராமச்சந்திரன் நீடு வாழ்க பல்லாண்டு!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.