காரைக்குடி மாநகராட்சியில், சுவரில் நடிகை திரிஷாவின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்ற சுயேச்சை கவுன்சிலரின் கோரிக்கை வைரலாகி வருகிறது.
காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் விசித்திரமான கோரிக்கையை முன்வைத்து ஆவேசமாக முழக்கமிட்ட வீடியோ காட்சி தற்போது பரவி வருகிறது.
மாமன்றக் கூட்டத்தின்போது திடீரென எழுந்துநின்ற அந்த சுயேச்சை கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"அவையின் முன்வரிசைச் சுவரில் முன்னாள், இந்நாள் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களின் படங்கள் வரிசையில் நடிகை திரிஷாவின் புகைப்படத்தையும் மாட்ட வேண்டும். அனைத்து தலைவர்களின் படங்களையும் வரிசையாக வைத்துள்ளீர்கள், அப்படியென்றால் இங்கு நடிகை திரிஷாவின் புகைப்படத்தையும் வைத்தே ஆக வேண்டும்" என்று குரல் எழுப்பினார்.
'திரிஷா படத்தை வைத்தே ஆக வேண்டும்' என்று அவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அவரது பேச்சைக் கேட்டு அங்கிருந்த பெண் கவுன்சிலர்கள், பிற உறுப்பினர்கள் சிலர் சிரிப்பதையும், சிலர் அதிர்ச்சியடைவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
ஒரு மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை விவாதிக்காமல், நடிகையின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என ஒரு மக்கள் பிரதிநிதி ரகளையில் ஈடுபட்ட சம்பவம், சமூக ஊடகங்ளில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏராளமானவர்களின் கிண்டல் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.