சீமான் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியை எழுப்பியுள்ளது.
முதல்வர் விஜய் குறித்து பேசினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போலீசார், சீமான் விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து யூட்டியூபர் பிஸ்மி உட்பட்டோர் அவதூறு பரப்பியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாரிடம் முறையிட்டபோது, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நா.த.க. வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
யூட்டியூபர் பிஸ்மி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் ரூ. 100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன், இதுபோன்று பல முறை அவதூறு பரப்பி உள்ளார் என்று நா.த.க. சார்பில் புகார் அளித்தபோது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவில்லை என்று முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி, "முதல்வர் விஜய் குறித்து பேசியதும் நடவடிக்கை எடுக்கிறீர்கள். ஆனால், இந்த வழக்கில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? இன்றைக்குள் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை நீக்கி இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, அது குறித்த அறிக்கையை மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்." என்று உத்தரவிட்டார்.