இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் தொடங்கிய இந்தியக் குடியரசுக் கட்சி அவரது மறைவுக்குப் பின்னர் பல பிரிவுகளாக இயங்கிவருகிறது. அதில் ஒரு பிரிவின் தமிழகத் தலைவர் செ.கு.தமிழரசன் நீண்ட காலமாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தார்.
இதுவரை குறிப்பாக ஜெயலலிதா காலம்வரை அவர் அ.தி.மு.க. கூட்டணியின் ஓர் அங்கமாகவும் இருந்தார். ஆனால் அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்களால் தமிழரசனும் சக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைப் போலவே சற்று இடைவெளியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியிலும் இவரை அ.தி.மு.க. தலைமை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது.
இதனால் வெதும்பிப் போன செ.கு.தமிழரசன், அமைச்சர் சேகர் பாபு முதலியோர் மூலம் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு வந்தார். இதை அதிகாரபூர்வமாகவே தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வந்து அவர் தெரிவித்தார்.