இளையோர் கலந்துகொள்ள வேண்டிய சிறுகதைப் போட்டியாக இந்த ஆண்டு அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தோம். வயது வரம்பாக நாற்பதை நிர்ணயித்திருந்தோம். எதிர்பார்த்திருந்த எண்ணிக்கையையும் தாண்டி சிறுகதைகள் வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் இருந்தும் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் அந்திமழையின் வாழ்த்துகள்.
இதுவரையிலான நமது சிறுகதைப் போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்த மூவர் - பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கவிதா முரளிதரன், திரைப்பட பாடலாசிரியரும் எழுத்தாளருமான பாக்கியம் சங்கர், எழுத்தாளர் அதிஷா – ஆகியோர் இம்முறையும் பரிசுக்குரிய கதைகளைத் தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
முதல்கட்ட வாசிப்பில் 54 கதைகளை அந்திமழை ஆசிரியர் குழுவும் நடுவர்களும் தேர்வு செய்தனர். அவற்றிலிருந்து 14 கதைகள் நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் பரிசுக்குத் தேர்வாகி உள்ளன. மொத்த பரிசுத்தொகை ரூ.50,000 பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த அச்சு இதழில் முதல் 9 கதைகள் இடம்பெறுகின்றன. மீதிக் கதைகள் அந்திமழை இணைய இதழில் வெளியாகும். வாசகர்களுக்கு வழக்கம்போல நிச்சயம் இது ஒரு வாசிப்புத் திருவிழாவாக அமையும். ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பை வாசித்த அனுபவம் கிடைக்கும் என நினைக்கிறோம். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். -ஆசிரியர்