தொடர்கள்

காதலிக்க நேரமுண்டு…”படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

பாமரன் எழுதும் தொடர்- 14

பாமரன்

”சமஸ்கிருதத்தை தினம் தோறும் உச்சரித்தால் அது சர்க்கரை நோயையும், கொழுப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும்” என்று மத்தியப் பிரதேச “கடப்பாறைக் கட்சி” எம்.பி. கணேஷ் சிங் பாராளுமன்றத்தில் அவிழ்த்து விட்ட புளுகுதான் இப்போது சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

சனிப் பொணம் துணை தேடும் என்கிற மூடக்கதையாய்… தான் அவிழ்த்துவிட்ட அண்டப் புளுகுக்கு ஆதாரமாக ”நாசா”வை வேறு துணைக்கு அழைத்திருக்கிறது இது.

சமஸ்கிருதம் சர்வரோக நோய் நிவாரணி மட்டுமல்ல… கணிணி நிவாரணியும் கூடத்தானாம். கம்ப்யூட்டர் புரோக்கிராமிங்கை சமஸ்கிருதத்தில் பண்ணினால் பிழைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லையாம்.

இதற்கு அமெரிக்காவில் உள்ள “நாசா” வரைக்கும் போவானேன்….?.

காஞ்சிபுரம் தேவநாத குருக்கள் கருவறையில் பண்ணிய ”சமஸ்கிருத புரோக்கிராமை”த்தான் நாம் கண்கூடாகக் கண்டோமே இது போதாதா?

ஆனாலும்….

அது வேறொன்றுமில்லை…

1985 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள நாசா ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய ரிக் பிரிக்ஸ் என்பவர் முன் வைத்த ஆய்வுத்தாள்தான் இவர்கள் அள்ளிவிடுவதற்கே “ஆதாரம்”.

”கம்ப்யூட்டர் புரோகிராமிங்குகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் கணிணி மொழிகளைப் போலவே இயற்கையான மொழிகளையும்  பயன்படுத்தினால் ஒருவேளை அதுவும் பயனளிக்கலாம்” என சொல்லியதை பிடித்துக் கொண்டுதான் சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதாவைக் கொண்டு வந்த அமைச்சர் ரமேஷ் போக்கிரியும் இந்த எம்.பி.யும் இப்படி கயிறு திரித்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அந்த ரிக் பிரிக்ஸ் எவையெவை இயற்கையான மொழிகள் என்றோ… சமஸ்கிருதம் பற்றியோ…. ஒத்த வரிகூட சொல்லவில்லை.

மூணு மைலுக்கு அந்தப் பக்கம் ஒரு கொசு பறக்குதுன்னு மத்திய மந்திரி சொன்னதற்கு… கூடவே ஒரு குட்டி கொசுவும் பறக்குது பார்க்கலியா? என்று ஒத்தூதியிருக்கிறார் இந்த பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங். அவ்வளவுதான்.

சமஸ்கிருதம் உச்சரித்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்…

சர்க்கரை தணியும்….

கொலஸ்ட்ரால் குறையும் என்பதைப் போல….

இந்தி உச்சரித்தால்

விரை வீக்கம் சரியாகும்….

சொப்பன ஸ்கலிதம்  குணமாகும் என்கிற ”கண்டுபிடிப்புகள்” கூட நாளை வெளிவரலாம்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை….

சமஸ்கிருதமோ…. இந்தியோ படிச்சா எது சரியாகுதோ இல்லையோ…

ஆனால்…

இந்த வட இந்தியாக்காரனுக தமிழ் படிச்சானுங்கன்னா நிச்சயம் மூளைக் கோளாறு குணமாகும் என்பது மட்டும் உறுதி.

**********

தைக் கேள்வி கேட்பாரே இல்லையா…?

பதவியை யாராவது பணம் கொடுத்து வாங்குவார்களா…?

ஊராட்சி பதவிகளை எல்லாம் ஏலத்தில் விட்டால் நாளை இந்த ஜனநாயகம் என்னாவது…? என்கிற ஓலம் காதைக் கிழிக்கிறது.

இப்படி ஓலமிடுபவர்களில் நீர்… நிலம்… காற்று… ஆகாயம்… அனைத்தையும் ஒட்டுமொத்த காண்ட்ராக் எடுத்து சுரண்டிக் கொண்டிருப்பவர்களும் அடக்கம்.

இதில் இவர்களது ஊடகங்களும் உள்ளடக்கம்.

என்னமோ ஏலம் போவது இந்த ஊராட்சி பதவிகள் மட்டும்தான் என்கிற ரீதியில் இவர்கள் அழுது புலம்புவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

இப்பதவிகள் எல்லாம் ஓப்பன் ஏலம் என்றால் அமைச்சர் பதவிகளோ… பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளோ மறைமுக ஏலம் அவ்வளவுதான்.

அவ்வளவு ஏன்….

முதலமைச்சர் பதவி தொடங்கி பிரதமர் பதவி வரைக்கும் அதானிகளும் அம்பானிகளும் டாட்டாக்களுமே திரைமறைவில் தீர்மானிக்கும் போது இதில் மட்டும் என்ன இந்த சனங்களின் நாயகத்துக்குக் கேடு வந்து விட்டது ?

தப்புன்னா இதுவும் தப்புதான் அதுவும் தப்புதான்.

இதைத்தான் எங்கூர்ல ” ஈ போறது தெரியும்…

எருமை போறது தெரியாது…”ன்னு சொல்லுவாங்க.

ஏம்ப்ப்பா நான் சரியாத்தான் கேக்குறனா…?

**********

ளையராஜா விரித்த மலர்ப்பாதையில் “நானொன்று கேட்டால் தருவாயா?” என அருண்மொழியும் சித்ராவும் சிலாகித்தபடி பாதம்பதித்து நடந்த மென் பொழுதொன்றில் அப்புத்தகத்தைத் திறந்தேன் நான்.

அதுதான் : ”உடலாடும் நதி.”

லதா அருணாச்சலம் என்கிற ஆளுமைமிக்க மனுசியிடம் இருந்து வந்திருக்கிற கவிதைத் தொகுப்பு.

மக்கள் தொகை எண்ணிக்கையை விட எண்ணற்ற காதல் கவிதைத் தொகுப்புகள் வந்து குவிந்தாலும் மனதில் நிற்பவை என்னவோ சிலரது சிலாகிப்புகள்தான்.

அதிலொன்றுதான் எழுத்து பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த உடலாடும் நதியும்.

”என் சிறு மயிலிறகால் மையலை

காதலின் ஈரத்தில் எழுதியுள்ளேன்

முகம் நோக்குகிற நாளில் உயிருருக

வாசிக்க வேண்டும் நீ”

என்கிறார் தனது மையலை எழுதும்போது.

பதினான்கு ஆண்டுகள் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி நைஜீரியாவில் வாழ்ந்த லதா அருணாச்சலம் எழுதியுள்ள முதல் கவிதைத் தொகுப்பு இது. தாய்த் தமிழகத்தை விட்டுப் பலகாலம் பிரிந்திருந்தவர் என்பதை மனதில் கொண்டால்தான் இவரது பல கவிதைகளது பரிமாணம் நமக்குப் புலப்படும்.

அத்தகையதில் ஒன்றுதான் “வீடு” கவிதை.

நிறம் மங்கிய அப்பூட்டைத் திறக்கையில்…

பூக்கள் குலுங்கிய முற்றமும்…

இருளைப் பருகிய அறைகளும்…

காதலில் கிறங்கிய காலங்களும் இதய அறையில் திறந்து கொள்கின்றன இவருக்கு.

“கால  அலை வீசி

கால்களை  உள்ளிழுத்து

எல்லைகள்  வகுத்து

எட்டாக் கோடிக்கு  இழுத்துச்  சென்றது.”

என்கிற லதா அடுத்து அடுக்கும் வார்த்தைகள்தான் அநேக அர்த்தங்களை நம்முள் விதைக்கின்றன.

“அன்றிலிருந்து

பொருட்கள்  அடுக்கியிருக்கும்

பொருட்காட்சியை

வீடென்றழைக்கிறேன்.”

என்கிற வரிகள் போதும் நமக்கு  அவரது உணர்வைச் சொல்ல.

நோயால் களையப்பட்ட ஒற்றை மார்பகத்துப் பெண்ணை உற்று ஊடுருவி நோக்கும் கண்களும், விரசம் கொண்ட உசாவல்களும் தாண்டி… நிதம் தவறாமல் கனவில் வரும் கவிழ்த்தி வைத்த ஒற்றைக் கிண்ணம் குறித்துக் கதைக்கையில் அதிர்ச்சியில் கனமாகிறது மனது.

நேசித்த முகத்தை ஆசிட்டுகளால் கழுவும் இக்காலத்தில் பிரிவும்கூட எப்படி கண்ணியமானதொரு கைகுலுக்கலோடு விடைபெறலாம் என்பதைச் சொல்கிறார் லதா.

“அன்பே!

எப்போது  விலக  வேண்டுமோ  சொல்

சிறகுகளைத்  தோளில்  பொருத்தி

இசைவுடன்  விடையனுப்பி  வைக்கிறேன்

நீங்குபவர்களுக்காகத்

துக்கம்  பாவித்தலென்பது

மரணத்தை  விடவும்  கடுமையானது.

லார்வாவை  நீத்துச்  செல்லும்

வண்ணத்துப்  பூச்சியின்

லாவகம்  தேவை

அன்பின்  ஆதுரத்தை  விட்டு  வெளியேறுவதற்கு.”

எனக்கு ஏனோ ஈழத்து நினைவு வந்தது இந்த “இதம் தேடி”யை வாசித்தவுடன்…

“இதம் தேடி

வந்து  செல்லும்  வலசைப் பட்சிகள்

இரவல்  கூடுகளுக்கு

ஒரு  போதும்  மீள்வதில்லை.

புலம்  பெயரவியலாக்

கனவுகளை  அடைகாத்தபடி

ஏங்கும்  ஆதி நிலப்  பறவைக்கு

எப்படி  மொழிவது

இதை?”

இந்தத் தொகுப்பிலேயே மனதை உறைய வைத்த கவிதை உண்டென்றால் அது “அம்மாவின் அல்சைமர்” தான். தனது மகளையே அடையாளம் மறந்து யாரென வினவும் அவலம் அது. அதை அப்படியே சொல்வதானால்….

“ஆரு பெத்த புள்ள இது

அடிக்கடி ஊட்டுக்கு வருதென்று

அவள் சொல்லும் போது மட்டும்

ஆயிரம் ஊசி உயிர் துளைக்கும் வலியை

என்ன செய்வதெனத் தெரியவில்லை.” என்கிறார் லதா.

அத்தனையும் சொற்சிக்கனத்தோடு செதுக்கப்பட்ட வரிகள். என்னைப் பார்… என் அறிவின் தீட்சண்யத்தைப் பார்… என எங்கும் முழங்காது எளிய நேசத்தோடு மனம் தொடும் வார்த்தைகள். அந்த எளிமையின் அழகுதான் இத்தொகுப்பு முழுவதும்.

இதில் ஒரு கவிதையை வாசித்தவுடன் சற்று நேரம் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நானே நதியாக மனதுள் பாவித்துப் பயணித்துப் பார்த்தேன்.

அதுதான் : “உடலாடும் நதி”

கடல் காணும் தாகத்தில்…

தானே நதியாகி

சுழித்தோடி

குதித்தாடி

சென்று சேர்ந்தபோது….

கடல் நினைத்த நதி குவளையில் குடி கொண்ட சோகம்

வெறும் காதலும் காமமும் மட்டுமில்லை மெல்லிய மனித உணர்வுகளும் கோர்த்துத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்நூலில். இத்தோடு மட்டுமன்றி இம்மனித குலம் எதிர் கொள்ளும் எண்ணற்ற அவலங்களையும் இவரது அடுத்தடுத்த படைப்புகள் பேச வேண்டும். அது மிக முக்கியம்.

இருப்பினும்  சும்மா  சொல்லக்  கூடாது….

ரொமான்சுன்னா  ரொமான்சு….

அப்படி  ஒரு  ரொமான்சு  பல  கவிதைகளில்…..

இதோ… சில சேம்பிள்  பீசுகள்…

(இன்னா மச்சி உன்னோட வரிகள் அம்புட்டு இலக்கியத்தரமா இல்லியேன்னு ஒரு மார்க்கமா பாக்குறீங்க…? பின்ன எத்தன நேரத்துக்குத்தான் நாமுளும் எலக்கியவாதி மாதிரியே வேசம் போட முடியும்…. அதான்….)

சேம்பிள் நம்பர் 1.

குறுவாளில் அமுதம் தோய்த்து

புறங் கழுத்தில் இறக்குகிறாய்

அதற்கு முத்தம் என்று

பெயரிடுகிறாய்.

**********

சேம்பிள் நம்பர் 2.

உடையாத தனிமை

தீண்டாத மெளனம்

நெஞ்சில் சிறகடிக்கும்

உன் நினைவுகள்

ஒரு நாளைக் கொன்று தீர்க்க

இது போதும்.

**********

சேம்பிள் நம்பர் 3

மெலிதாய் அசையும்

நிறை சூலியின்

வயிற்றுப் பிள்ளையாய்

ஆழ் மனதில்

புரண்டு படுக்கும்

ஆனந்த அசைவுகளாய்

உன் ஆழ்ந்த நினைவுகள்.

**********

சேம்பிள் நம்பர் 4

நெல்லித் துவர்ப்பென

மென்று கொள்கிறாய்

ஊடலை.

பின் பருகக் காத்திருக்கும்

எனது முத்தங்கள்

தீஞ்சுவை நீர்ச்சுனை.

**********

லதா அருணாச்சலத்தின் இவ்வரிகளோடு பயணிக்கும்போது நமக்கும் இன்னொரு முறை காதலிக்கலாம் போலத்தான் இருக்கிறது.

அப்படி….

என்னைப் போன்றே எண்ணுகிறவர்கள் இந்த நூலை வாங்கி வாசிக்க அழைக்கவேண்டிய அலைபேசி :98400 65000.

மற்ற அலப்பரைகள் அடுத்த வாரம்……