தொடர்கள்

விமர்சனம் - மதிப்புரை

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-15

சா.கந்தசாமி

விமர்சனம் என்பது ஒரு சொல்.அது சமஸ்கிருதம். அர்த்தம் 'பெருமையாகச் சொல்வது' என்பது.ஆனால் தமிழ் குற்றம் குறை கண்டு சொல்வது என்றாகிவிட்டது.விமர்சனத்தை எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கு கொண்டு வந்தார்கள்.அது இலக்கிய விமர்சனமாகியது.ஒரு நூலை அலசி ஆராய்ந்து அதன் நிறையை எடுத்துச் சொல்வது - குறையைக் குறையாகவே சொல்வது என்பதில் விமர்சனம் வரவே இல்லை.அது வழுகி விட்டது. பத்திரிìகைகளில் விமர்சனம் காணாமல் போய்விட்டது.

எதுவும் இல்லாமல் போவதில்லை.ஓரிடத்தில் தொலைந்தால் இன்னொரு இடத்தில் தலைகாட்ட வேண்டும்.தமிழ் பத்திரிìகைகளில் இலக்கியத்தில் காணாமல் போன விமர்சனம் சினிமாவோடு சேர்ந்து கொண்டு விட்டது. விமர்சனம், திரை விமர்சனமாகி அதனோடு சேர்ந்து விட்டது.ஒவ்வொரு பத்திரிகையும் திரை விமர்சனம் எழுதுகின்றது.

உண்மையில் திரைவிமர்சனம் திரை விமர்சனமே இல்லை.பாராட்டுரை, சிபாரிசு, சிலாகித்தல் - என்று அப்படி உள்ள பெயர்களில் சொல்லிவிடலாம்.திரை விமர்சனம் - விமர்சனமாக இல்லாதபடியால் அதைத் திரையுலகம் ஏற்றுக் கொண்டு விட்டது.

ஒவ்வொரு மனிதனுக்கும், தன்னை, தன் காரியத்தை இன்னொருவர் அங்கீகரிக்க வேண்டும் - பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.அது இன்Ú, நேற்று ஆசை இல்லை.மனித வர்க்கத்தின் நெடுநாளைய ஆசை.அதற்கு காலம் எல்லாம் சொல்ல முடியாது.அது மனிதனோடு பிறந்து மனிதனோடு ஜீவித்துக் கொண்டிருப்பது.ஆளை ஒழித்தாலும் ஆசையை ஒழிக்க முடியாது.

ஆசையை ஒழிக்க வழி அதை ஏற்பது தான்.அங்கீகரிப்பதுதான்.அது அங்கீகரிக்கப்படப் பட ஆசையின் வேகம் குறைகிறது.ஏற்கிறவர் அங்கிகரிக்கிறவரின் பிரபல்யம், தகுதி முன்னே வருகின்Èன.முகமற்ற மனிதனின் அங்கீகாரம் - ஒரு அங்கீகாரமே இல்லாமல் போகிறது.எனவே எதையும் ஏற்க ஓர் அதிகாரம் வேண்டும்.அதிகாரம் சொல்வதெல்லாம் சரிதான்.அது கேள்விக்கு அப்பாற்பட்டது.எனவேதான் பரிசை மன்னவனும், தண்டனையை அதிகாரியும் தரவேண்டும் என்று மாக்கி வெல்லி சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறான்.

பரிசு, விருது என்பதில் சிக்கிக் கொள்ளாத ஆளே இல்லை.அதில் யோகிகள் விதிவிலக்கல்ல. அவர்கள் தான் ஆசையைத் துறக்காத ஆத்மாக்கள்.விளம்பரம் வேண்டி நிற்பவர்கள். மாக்கிவெல்லி சொன்னதெல்லாம் அவர்களுக்கு பொருந்தாது.ஏனெனில் தனக்குத் தானே விருது கொடுத்து மதிப்புரை எழுதிக் கொள்கிறவர்கள்.

பத்திரிகைகள் வந்ததும் மதிப்புரை வந்தது. அது விமர்சனமாக உருவான போது - அதன் தாக்கம் தாள முடியவில்லை.அச்சு எழுத்து தாம் பார்ப்பது எல்லாம்.எல்லா இடத்திற்கும் போய் விடுகிறது.படிக்கும் போது நம்பிக்கையைக் கொடுத்து விடுகிறது.

தமிழ் பத்திரிகைகள் விமர்சனத்தைக் கண்களுக்கு எட்டாத தொலைவில் தள்ளிவைத்து விட்டன.திரை விமர்சனத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன.அது படிப்பதற்கும், பார்ப்பதற்கும் இடையேயுள்ள இடைவெளி சம்பந்தப்பட்டது இல்லை. பார்த்து கிரகிப்பதில் உள்ளது.காற்றிலன் ஆயினும் கேட்க; கேட்க கேட்க அறிவு கூடும்.பார்த்து எழுதும் விமர்சனத்தால் என்ன லாபம்.கலையின் லாபம் அனுபவிப்பதுதான்.பார்ப்பது ஓர் அனுபவம் எழுதுவது ஓர் அனுபவம்.அனுபவம் எல்லாவற்றையும் தாண்டிவிடுகிறது.எழுதுகிறபோது அது தூக்கலாகத் தெரிகிறது.

சி. சு. செல்லப்பா ' எழுத்து' என்ற சிற்றேட்டை முப்பதாண்டு காலம் நடத்தினார். அவர் காந்திய வாதி. அதைவிட முக்கியம் இலக்கிய தீவிரவாதி.தனிப்பட்ட ஆளாக இருந்து கொண்டு சொந்தப் பணம் போட்டு பத்திரிகை நடத்தினார்.

அவர் 'எழுத்து'வில் மதிப்புரைகள் வந்தன.ஆனால் இலக்கியப் பத்திரிகையின் மதிப்புரையாக இல்லை. மதிப்புரையில் சமரசம் இல்லை என்பது சரிதான்.ஆனால் வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்கிற ஆட்களின் மதிப்புரை எப்படியிருக்கும்?

மதிப்புரை எழுதி ஓர் எழுத்தாளரை கதி கலங்க அடிப்பது ஒருவகை.மதிப்புரை எழுதாமலே நடுநடுங்க வைப்பது இன்னொருவகை.அதில் எழுதியவர் மட்டுமில்லை, எழுதாமல் விட்டவரும் கூடத்தான் அடக்கம்.

மதிப்புரைகள் எப்படி மதிப்பிழந்தன?

எழுதியவர்களால் மதிப்பிழந்தன.

எழுதப்பட்ட புத்தகங்களால் மதிப்பிழந்தன என்று பொதுவாகச் சொல்லலாம். ஆனால் மதிப்புரையில் மதிப்பு பெற முடியும் என்பதும் உண்டு.
பாரதிதாசன் முதல் புத்தகமான அழகின் சிரிப்பைக் குத்தூசி குருசாமியும் அவர் மனைவி குஞ்சிதபாதமும் சேர்ந்து வெளியிட்டார்கள். அதற்குப் பேராசிரியர் கே. சுவாமிநாதன் ஒரு மதிப்புரை எழுதினார்.அந்த மதிப்புரை மறுபடியும், மறுபடியும் எடுத்துச் சொல்லப்படுகிறது.அது பாரதிதாசனின் மேன்மையா? சுவாமிநாதனின் கண்டுபிடிப்பா? என்றால் மதிப்புரையில் இரண்டும் இருக்கிறது.

மதிப்புரையை எழுதித்தான் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில்லை. பேசியும் ஸ்தாபித்து விடலாம்.ஆனால் ஒரு படைப்பு ஜீவிப்பது அதன் உள்ளிருக்கும் தனித்தன்மையால் தான்.அப்படி உயிர் இல்லாததையெல்லாம் மதிப்புரை எழுதி , விமர்சனம் செய்து ஸ்தாபிக்க முடியாது என்பது மதிப்புரையின் சரித்திரமாகும்.

(சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.)

மார்ச் 01, 2006

அடுத்த பகுதி>>>